நாற்பதுகளில்…
…….
கவனம் இன்னொரு காதல் வரும்.
புன்னகை வரை போ,
புடவை வரை போகாதே.-வைரமுத்து.
மேற்கண்ட கவிதை வரிகள் இந்த முழு குறு நாவலுக்கு ஏற்றதாய் இருக்காது. ஆனால் கதையின் தொடக்கம் அப்படியாகத்தான் உள்ளது. 35 வயது மிகுந்த ஒரு முதிர் கன்னி கெளரி. அவளது இளமைக்கால காதலன் ராமநாதன். கௌரி அச்சகம் என்கிற பெயரில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார். அட அப்ப அதுதான் கதையா என்றால்.. அல்ல!
கருணையினால் அல்ல
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – முதல்பதிப்பு 1965. பத்தாம் பதிப்பு 2011
பிரிவு: புனைவு
கன்னிமரா: –
NLB: http://www.nlb.gov.sg/newarrivals/itemdetail.aspx?bid=200158040
இந்த குறுநாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. பார்க்க – கருணை உள்ளம்
தனிமை வாழ்வை மேற்கொள்ளும் கௌரி, பெண்கள் விடுதியிலிருந்து சூசையப்பரின் வீட்டு மாடிக்குக் குடித்தனம் வருகிறாள். பழைய காதலன் ராமநாதன், அவளுடனான உறவைப் புதுப்பிக்கும் பொருட்டு அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பழத்தை கத்தி வெட்டுவது போல ராமநாதனின் மனைவியிடம் ராமநாதனின் விருப்பத்திற்கு முடிவு கட்டிவிட்டு வருகிறாள். அந்த இடம் செம க்ளாஸ்!
சூசையப்பர் வீட்டு கீழ் வீட்டுப் போர்ஷனில் குடியிருக்கும் முதலியார் என்கிற காக்கா வலிப்பு வியாதிகாரரிடம் கருணை காட்டப்போக, கதை வெகு வேகமாகப் போகிறது.
முந்தைய ஜெயகாந்தன் பதிவுகளைப்போல புரட்சிகள் ஏதுமில்லாத, நூறு சத சாத்வீக காதல் கதை. வெளி வந்த ஆண்டு 65ஆம். ஆச்சரியம்!
பிரதான கதாபத்திரங்கள் இருக்க என்னைக் கவர்ந்த இன்னொரு கதாபாத்திரம் – சூசையப்பரின் மனைவி ஆரோக்கியத்தம்மாள். கடுகடுவென அறிமுகம் ஆனாலும், வாழ்க்கை தந்த அயற்சி இருந்தாலும், கல்லுக்குள் ஈரம் கசிவதைப்போல அப்பழுக்கற்ற தாய்மையை மற்றவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம். எழுந்து சென்று பிள்ளைகளை அடிக்க இயலாதபோது கரிசனமாய் பேசி அருகே வரவைத்து அடித்து துவைப்பதில் ஒரு பத்திரகாளி! முதலியாரின் நிலை அறிந்து கருணை கொண்டு குறைந்த விலைக்கு கீழ்போர்ஷனை வாடகைக்கு விடும்போதும் – முதலியார் வலிப்பு வந்து துடிக்கையில் பரிதாபப்பட்டு கண்கலங்கும் போதும் ஒரு மூதன்னை! தவிர, இருக்கிற குழந்தைகள் போதாதென்று கடைசியாக கருவுறுகிற இடம் செம பட்டாசு.
ஆரோக்கியத்தம்மாள் பாத்ரூம் அருகே உட்கார்ந்துகொண்டு ஒரு மத்தகஜம் கர்ஜிப்பதுபோல் ஓங்கரித்து வாந்தி எடுத்தவாறு ஊரைக் கூட்டுவது போன்று ஓலமிட்டு அலறி “கர்த்தாவே.. சேசுவே” என்று பிரலாபிக்கும் களேபரத்தை அவளது ஏழு புத்திரச்செல்வங்களும் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன.
…. உடம்புக்கு என்னவோ பதைத்த கௌரி அவள் அருகே ஓடி ஆரோக்கியத்தம்மாளின் தலையைத் தாங்கிப் பிடித்தவாறு ஆதரவான குரலில் விசாரித்தாள்.
“ஏம்மா, என்ன பண்ணுது.. காலையில என்ன சாப்பிட்டீங்க?”
கௌரியின் பிடியிலிருந்து திமிறித் திமிறி ஓங்கரித்த ஆரோக்கியத்தம்மாள் அடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடியக் கூறினாள்.
…. கர்த்தரே சேசுவே.. ஓவ்… என்று ஒரு பிளிறலோடு அவள் வாந்தி எடுப்பதைப் பார்த்த கௌரி அப்புறம்தான் விஷயம் புரிந்து சிரித்தாள்.
“சிரிக்கிறியா? என் ஒடம்பு இருக்கிற இருப்பில இந்தத் தடவை நான் செத்துப்போயிடுவேன்” என்று ஆரோக்கியத்தம்மாள் கூறியதைக் கேட்டவாறு வெளியிலிருந்து வந்த சூசையப்பர் ‘ம்.. ஏழு தடவை சாகாம இப்பத்தான் சாகப்போறா’ என்று வாய்க்குள் முனகிக்கொண்டே தன் அறைக்குள் சென்றார்.
தனக்கும் ராமநாதனுக்கும் திருமணம் செய்ய முயலும் ராமநாதனின் மனைவியிடம் கடிந்து கொள்ளும்போது கௌரியின் பேச்சில் இன்னொரு பாக்கியலெட்சுமி டீச்சர் தெரிகிறார் (பார்க்க – ஒவ்வொரு கூரைக்கும் கீழே).
“ஒழுக்கம் மட்டுமல்ல; உணர்ச்சிகளும்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிதான் இருக்க முடியும்.. இல்லேங்கிறது வேற விஷயம்! ஒரு ஆணுக்கே உரிய சுயநலத்தில அவர் மனசில இப்படி ஒரு சபலம் இருக்குன்னு எனக்குப் புரிஞ்சுது.
ஏதோ அவர் மேலேயும் என் மேலேயும் அனுதாபம் காட்றதாக உங்களுக்கு நெனப்பு.. அவர் மேல நீங்க அனுதாபம் காட்டறது உங்க சொந்த விஷயம். ஆனா என் வாழ்க்கைக்கு நானேதான் பொறுப்பு…
வாழ்க்கையில ஏற்படற பல சிக்கல்களுக்கெல்லாம் இந்த அர்த்தமில்லாத அனுதாபம்தான் காரணம்.”
ரொம்ப சூடான பக்கங்கள் அவை!
ஆனால் அந்தப் பக்கங்கள் தாண்டியதும் கௌரியின் காதல் மலரத்தொடங்குகிறது. திருவான்மியூர் பீச்சில் காற்றை வாங்கிக்கொண்டு பாதத்தில் படும் தண்ணீர் காலை நனைக்காமல் நடக்கும் ஒரு இனிமை!
“அடிக்கடி உங்களுக்கு இப்படி வருமா?” என்று விசாரித்தாள் (கௌரி)
“ம்..” என்று சூள் கொட்டியவாறு குனிந்திருந்த தலையை அசைத்து, “என்ன செய்யறது” என்று பரிதாபமாய் அவளை முகம் நிமிர்ந்து பார்த்து “இது படறவனைவிட பார்க்கிறவங்களைக் கஷ்டப் படுத்தற வியாதி. கஷ்டப்படறதுகூடச் சிரமமில்லே. ஆனா பலரும் பார்க்கும் படியா கஷ்டப் படறதெ நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு” என்று தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல் முனகிக் கொண்டார் முதலியார்.
கடுமையான தாழ்வு மனப்பான்மை இந்த முதலியாருக்கு. இருக்கும்தானே.
“நீங்க (கௌரி) சொன்னீங்களே ‘ஒருத்தருக்கொருத்தர் துணை’யான்னு – அதுதான் கல்யாணத்தின் அடிப்படை, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒருத்தருக்குத்தான் துணையாயிருக்கும் அது.. அந்த அபாக்கியவதிக்கு நான் சுமையா இருப்பேன்”
“என்னை மாதிரியே ஒரு வலிப்புக்காரியை நான் கல்யாணம் செய்துக்கிட்டா ஒருத்தருக்கொருத்தர் துணையாயிருக்கும்.. ஆனா ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்தில வந்துட்டா?” என்ற அவரது வக்கிரமான ஹாஸ்யத்தை அவளால் ரசிக்க முடியவில்லை.
இன்னும் விடுபட்டிருக்கும் ஒருத்தர் சூசையப்பர். கருணை நிரம்பிய கிறித்தவர். கல்யாண விசியமாகக் குழம்பும் முதலியாரை ஊக்கப்படுத்தும் இடத்தில்தான் கொஞ்சம் பேசுகிறார்.
“இதிலென்ன யோசனையிருக்கு. அந்தப் பொண்ணு எங்க மதத்தைச் சேர்ந்தவளா இருந்தா இந்நேரம் ஒரு கன்னாகாஸ்திரீயா இருக்கும். ஒரு இந்துப் பெண்ணா இருந்தாலும் மனசாலே அது ஒரு கன்னிகாஸ்திரீன்னே நான் நினைச்சிருந்தேன். ஒரு நல்ல கன்னிகாஸ்திரீக்குள்ள மனசோட இருக்கிற ஒரு பொண்ணு எங்க மதத்தில சேர்ந்திருந்தா அதனாலே எங்க மதத்துக்கு லாபம்தான். அப்படியில்லாமல் அந்த மனசுடைய ஒரு பொண்ணு வேறு மதத்திலே இருந்து ஒரு மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதனாலே மனுஷ குலத்துக்கே லாபம்தான்.. ஏய் முதலியாரே, உன் வாழ்க்கைக்குத் துணையா ஒரு தேவதை வந்திருக்காப்பா….”
இன்னுமொரு பதிவில் சந்திப்போம் நண்பர்களே!
ஜெய் ஹிந்த்.
என்ன பாண்டியன், வரிசையாக ஜெயகாந்தனின் கதைகளை படித்துத் தள்ளுவது என்று ஏதாவது பந்தயமா?
இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது படித்த நினைவு இருக்கிறது. ஆனால் அந்த வயதில் எவ்வளவு புரிந்து கொண்டிருப்பேன் என்று தெரியவில்லை. இப்போது உங்கள் மதிப்புரை படிக்கும்போது, உங்கள் கண்ணோட்டத்துடன் இன்னொருமுறை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தொடரட்டும் உங்கள் படிப்பார்வம். வாழ்த்துக்கள்.
சொல்ல மறந்துவிட்டேனே! ஜெமோ வின் அறம் வாங்கியிருக்கிறேன். இன்னும் ஆரம்பிக்கவில்லை. சம்சார அலைகடலில் எப்போது நேரம் கிடைக்குமோ தெரியவில்லை.
உங்களுடைய இந்தியாவும், இந்தோனேசியாவும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
ரஞ்சனி
வணக்கம் அம்மா.
ரெண்டு வாரம் முந்தி நூலகம் சென்றபோது கையில் சிக்கியவை இவை. தலைமுறை வித்தியாசம் இருப்பதால் இவற்றைப் படிக்க ஆர்வமாய் உள்ளது. தமிழ் கூறும் நல்லுலகின் நன்மை கருதி எல்லாவற்றையும் ஒரேயடியாக பதிவிடாமல் அவ்வப்போது எழுதி வருகிறேன் 🙂
தாங்கள் அறம் வாங்கியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல வாசகர்களின் மனம் கவர்ந்த சிறுகதை தொகுப்பு அது. சென்றமுறை தாய் நாடு வந்தபோது வாங்கினேன். ஆனால் கொண்டு வர முடியாதபடி என் மனைவியார் பறித்துக்கொண்டு விட்டார். தாங்கள் படித்துவிட்டு, முடிந்தால் வாசிப்பனுபவத்தையும் பதிவிடவும்.
‘இந்தியாவும் இந்தோனேசியாவும்’ ஒரு மொழி மாற்ற கட்டுரை. மொழி பெயர்ப்பது எனக்கு நிறைய சோம்பலை உண்டு பண்ணுகிறது. எப்போ முடிய போகிறதென்று தெரியவில்லை.
தங்கள் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும், தொடர்ந்து ஊக்குவிப்பதற்கும் மிக்க நன்றி.
Problem with Tamil font. Hence this comment in English.
Are you playing back on your memory lane on Jayakanthan or started reading these novellas!
However, it would influence readers to go through these works by Jayakanthan, if they had not read them earlier. Carry on…!
-Aekaanthan..
தமிழ் கீபோர்டு வேலை செய்யாத சமயத்திலும் பதிலுரை இட்டதற்கு நன்றி சார்.
இரண்டும் கலந்ததுதான். எப்படியோ நம்மாளான ‘பொதுச்சேவையை’ “ஆற்றிக்கொண்டே”தானே இருக்கவேண்டும் 🙂
நன்றி!
I have not read this book. But what you quoted here is interesting
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருணையினால் அல்ல சமீபத்தில் சென்னை போயிருந்தபோது படித்தேன், பாண்டியன். அந்த காலத்தில் வெளிவந்த படியே கோபுjலுவின் படத்துடன் ஜெயகாந்தன் குறுநாவல்கள் மீண்டும் பதிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. முதலியாரின் கதாபாத்திரத்தைப் படிக்கும் போது எப்படி இவரை மனதில் நிறுத்துவது என்று தவித்த எனக்கு கோபுலுவின் படம் வியக்க வைத்தது. என்ன அழகாக அவரை வரைந்திருக்கிறார்! முதலியாரின் மேல் இருந்த மரியாதை கோபுலுவின் படம் பார்த்து பலமடங்கு அதிகமாயிற்று.
கெளரி, ராமநாதன், அவரது மனைவி, மகள், சூசையப்பர் என்று ஒவ்வொருவரும் மனத்தைக் கவர்ந்தார்கள். மறக்க முடியாத கதை.
கோபுலு மறைந்தார் என்று கேள்விப்பட்டவுடன் எனக்கு அவர் வரைந்த முதலியார் படம் தான் கண் முன் வந்தது. அற்புதமான கலைஞர். அவரது படங்கள் மூலம் என்றென்றும் வாழ்வார்.
////அந்த காலத்தில் வெளிவந்த படியே கோபுjலுவின் படத்துடன் ஜெயகாந்தன் குறுநாவல்கள் மீண்டும் பதிப்பு செய்யப்பட்டிருக்கின்றன///// அம்மா தகவலுக்கு மிக்க நன்றி. தயவு செய்து பதிப்பகத்தார் விபரம் தாருங்கள்.
விகடன் பதிப்பு என்றே நினைக்கிறேன். எதற்கும் ஒரு முறை அம்மாவிடம் பேசிவிட்டு சொல்கிறேன். அந்தப் புத்தகத்தை படிப்பதே ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது, அந்த காலத்திய ஜோக்குகள், விளம்பரங்கள்…..அட….அட….!
எப்படி படிப்பது??அதற்கான ஆப்சனே காணொமே
அப்படி ஏது கொடுக்கவில்லை. 35 ரூபாய்தான். http://www.nhm.in/shop/1000000004042.html ஆர்டர் செய்துவிடுங்கள்.