வணக்கம்
இன்று ஐந்தாம் நாள். எல்லவிலிருந்து நீங்குகிறோம்.
இன்றைய பயணத் திட்டம்:
• யால தேசிய வனத்திற்குச் செல்வது
• வழியில் இராவணா அருவியைப் பார்வையிடுவது
• போகும் வழி எங்கும் உங்களுடன் கதை அடிப்பது
முந்தைய பதிவுகள்
- சிறிய சிவனொலி பாதம், 9 கண் பாலம் – எல்ல
- எல்ல ரயில் பயணம்
- கண்டியிலிருந்து நுவரெலியா
- சென்னையிலிருந்து கண்டி
- இலங்கை பயணம்
அமைதி மற்றும் பசுமையான நகரம் எல்ல. நம் ஊர் போல் அங்கு மாசு இல்லை. ஒரு இடத்திலிருந்து தூரத்தில் இருக்கும் ஒரு இடத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். அங்கு பெரும்பாலான மக்கள் வாகனங்கள் ஓட்டுவதை பார்க்க முடியவில்லை. அங்கு சிறிய தூரம் செல்ல அவர்கள் மிதி வண்டி உபயோகப் படுத்துகிறார்கள்.
எல்லவில் இருந்து கிளம்புவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. எங்கள் பணியாளர் அதிகாரி இலங்கை மீண்டும் வந்தால், அந்த விடுதியில் தான் தங்க வேண்டும் என்றார். நாம் கிளம்புவதற்கு முன் நான் சாப்பிட்டு விட்டு வருகிறேன்.
நாங்கள் நேற்று போல உண்டோம். (ஆனால் அந்த இட்லி என்னும் கல்லை மட்டும் சாப்பிட வில்லை 😊😊)
உண்டு முடித்தோம். சரி, வாருங்கள் யால தேசிய வனத்திற்குக் கிளம்பலாம்!
இப்பொழுது நாம் எல்லவிலிருந்து நாம் வெளி நகரம் வந்து விட்டோம். இந்த பாதையில் வருவது மிக நன்றாக இருக்கிறது. எல்ல மலை பிரதேசத்திலிருந்து அரை மணி நேரத்தில் கீழே வந்துவிட்டோம். ‘வரும்வழியில் பனிமலையில்’ ராவணா நீர்வீழ்ச்சியை கண்டோம்.
உயரத்திலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர். ஆபத்தான வழுக்கும் பாறைகள். இந்த அருவி நிறைய பேரைப் பலிகொண்டதாக துஷார கூறினார். நீர் ஜில்லென்று இருந்தது. அருவிப் பக்கம் போகக்கூடாது என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள். அருவியின் பிரம்மாண்டமான காட்சியைக் கண்டு, புகைப்படம் எடுத்துவிட்டு, நீரில் விளையாடி பின்னர், கிடைத்த நீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு, கிளம்பிவிட்டோம்.
நாங்கள் மலையில் இறங்கிய பிறகு வெல்லவாய என்ற ஊரைக் கடந்தோம். அன்று புத்த மதத்தினருக்கு ஏதோ சிறப்பான நாளாம். அங்கு நிறைய மக்கள் திரண்டு இருந்தனர். அங்கே சிறுவயது புத்த துறவிகளைக் கண்டோம். அவர்கள் ஊருக்குள் சென்று மடத்தில் அன்னம் பெற்றுக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களைக் கடவுளாகப் பாவித்து உணவு மற்றும் பழங்களைக் கொடுத்தார்கள். துஷார ‘அந்த சிறுவயது புத்தர் பிக்குகள் புத்தர் மடாலயத்தில் இருக்கும் வயதான பிக்குகளுக்காக உணவு எடுத்து செல்வர்’ என்று கூறினார்.
நீண்ட பயணத்திற்குப் பிறகு திஸ்ஸமஹாராம சென்றடைந்தோம். வரும் வழியில் சீனப் புகழ்பெற்ற அம்பாந்தோட்டை வானூர்தி நிலையம் பற்றிய மைல் கற்களைப் பார்த்தோம்.
கதிர்காமம் கோயில் 18 கிமி என்று ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்தோம். அது என் அம்மா கண்களை உறுத்தி இருக்க வேண்டும். ஏன் என்று அப்புறம் சொல்கிறேன்.
ஓரிடத்தில் இயற்கை அழைப்பிற்காக வண்டியை நிறுத்தினோம். அங்கே குண்டுமணிகளைப் பார்த்தோம். என் தம்பியின் பள்ளி வளாகத்தில் கூட இருந்தது. எங்கள் வீட்டுக் கொள்ளையிலும் முன்னர் இருந்தது என்று என் தந்தை கூறினார். அதில் கொஞ்சம் பிடுங்கி பையில் போட்டுக்கொண்டோம். அழகான நஞ்சு மணி!
திஸ்ஸமஹாராம நகரில் மதிய உணவிற்கு ஒரு சுற்றுலா உணவகத்திற்குச் சென்றோம். இந்த உணவகத்தில் நாங்கள் வயிறு நிறைய உண்டோம்! நானும் அம்மாவும் சப்பாத்தி கேட்டோம். என் அப்பா உள்ளுர் rice & curry கேட்டார். கடைசியில் மாற்றிச் சாப்பிட வேண்டி ஆகிவிட்டது.
நாங்கள் இலங்கையில் சாப்பிட்டதிலேயே அதிக விலை உயர்வான சாப்பாடு அது. கொழும்பு நட்சத்திர ஓட்டல் உணவகத்தைக் காட்டிலும் அதிகம்! பர்சு பழுத்துவிட்டது.
நாங்கள் உண்ட பின் யால தேசிய வனத்திற்க்குச் சென்றோம்.
யாலா தேசிய பூங்கா அமைதியாக இருந்தது. நாங்கள் வந்த வண்டியை உணவத்தியே நிறுத்திவிட்டு, ஒரு தனியார் ஜீப்பை எடுத்துக்கொண்டு, அந்த நாளின் மீதியை வனத்தில் கழித்தோம்.
யானைகள், முதலைகள், பறவைகள் போன்றவற்றை நாங்கள் மிகவும் நெருக்கமாகப் பார்த்தோம்.
சிறுத்தையைப் பார்த்துவிட்டு சோம்பல் முறிப்பது எனது முக்கிய இலக்கு :D.
நீங்கள் சீக்கரமாகவே விலங்குகளுடன் சூழப்படுவீர்கள். நீங்கள் சிறுத்தையைப் பார்க்காத வரை அந்த வனம் அழகாக இருக்கும். பார்த்துவிட்டால்….
வரண்டு போன வனம் இது. முள் காடு. கண்டியிலிருந்து, எல்ல வரை ஜில்லென்று இருந்த பிறகு, அதற்குத் தலைகீழான தட்பவெப்பம். வியர்த்துக் கொண்டியது. வெயில் உரைத்தது. புழுதி பறந்தது. கணேசர் தரிசனம் கிடைத்தது 🐘🐘🐘.
நாங்கள் பூங்காவை சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பும் போது பொழுது சாய்ந்துவிட்டது. இரவு உணவிற்காக தயிர், வாழைப் பழங்கள் வாங்கிக் கொண்டு எங்கள் விடுதிக்கு சென்றோம். எங்கள் இராத்திரி உணவிற்காக வெந்த சோறு மட்டும் வாங்கிக் கொண்டோம். இலங்கைத் தயிர் ஊற்றி நீங்கள் அவசியம் சாப்பிடவேண்டும். சாப்பிட்டு முடித்த பின் உங்கள் கையில் வெண்ணெய் பிசுபிசுக்கும். மிக நல்ல உணவு 😋😋😋. ரூஸியோ தனி!
அடுத்த வாரம் பார்க்கலாம்.