Five on the Treasure Island – Enid Blyton (நூல் அறிமுகம்)


எனிட் பிளைட்டனின் புதையல் தீவில் ஐந்து என்பது குழந்தைகளுக்கான ஈர்க்கக்கூடிய மற்றும் மகிழ்ச்சிகரமான சாகசக் கதையாகும். இது முதல் பக்கத்திலிருந்து வாசகரை உள்ளிழுத்துக்கொள்கிறது (இதில் பல குழந்தைகளுக்கான அல்லது வயது வந்தோர் புத்தகங்கள் கூட சருக்கிவிடுகின்றன). இறுதிவரை உற்சாகம் நிறைந்த வாசிப்பாக இது அமையக்கூடும். 7 முதல் 12 வயதுக்குட்பட்ட இளம் வாசகர்களுக்கு இந்த நாவல் சரியான தீனி. நான் ஏன் இதை படிக்கிறேன் என்று என்னிடம் கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்ன? அது 1942 இல் வெளியிடப்பட்டது, நான் அப்போது பிறக்கவில்லை, அதான்! 🙂 ஆனால் பாருங்க, சிறந்த கதைகள் ஒருபோதும் பழையதாக மாறாது! இப்படி சொல்லலாமே, பழையதாக ஆக ஆகத்தான் திராட்சை ரசத்திற்கு மதிப்பு கூடுகிறது. அது போல!

ஜூலியன், டிக் மற்றும் ஆன்னி கோடை விடுமுறைக்கு தங்கள் உறவினர் ஜார்ஜை (அவள் பெயர் ஜார்ஜினா, ஆனால் அவள் ஜார்ஜ் என்று அழைக்கப்படுவதை விரும்புகிறாள்!, ஆனால் அவள் பழகுவதற்குக் கடினமானவள்) சந்திக்கின்றனர். அவள் சில சமயங்களில் கொஞ்சம் எரிச்சலாக இருக்கலாம். ஆனால் ஜூலியன் முதிர்ச்சியடைந்த முறையில் நடந்துகொண்டு சிறந்த நட்புக்கு வழி வகுக்கிறான்.

ஜார்ஜ் அவர்களை (அவளது நாய் டிம்முடன் – நாயுடன் சேர்ந்து அவர்கள்தான் அந்த ஐந்து பேர்!) அவளது தாயாருக்குச் சொந்தமான கிரின் தீவை ஆராய்வதற்காகவும், அதன் அருகிலுள்ள விபத்துக்குள்ளாகி மூழ்கிப்போன கப்பலைக் காட்டவும் அழைத்துச் செல்கிறாள். ஒரு பெரிய புயல் தாக்கும் போது, அந்த விபத்துக்குள்ளான கப்பல் இவர்களின் தீவில் கரையொதுங்குகிறது (தசாவதாரம் படத்தில் சுனாமி அடித்து பள்ளி கொண்ட பெருமாள் சிலை கடலை விட்டு வெளியே வருமே! அது போல!). அப்போது இருந்து நடக்கும் சம்பவங்கள் மற்றும் சம்பாஷனைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. மர்மமான தடயங்கள், பொறிகள், அந்நியர்கள் போன்றவற்றை சந்தித்து அந்தக் குழந்தைகள் புதையல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பிட தேவையில்லை, இந்த கதை மிகவும் ஈர்க்கக்கூடியது, The Secret Seven | எனிட் பிளைடன் போன்று. இது குழந்தைகளுக்கான நட்பு மற்றும் துணிச்சல் போன்றவற்றைச் சொல்லிச் செல்லும் சாகசக் கதை. குழந்தைகள் வளர்ப்பு குறித்த பெரியவர்களுக்கும் இது ஒரு தவிர்க்க முடியாத செய்தியைக் கொண்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போன்றது! ஒவ்வொரு பக்கமும் உங்களை ஒரு புதிய சாகசத்திற்குத் தள்ளுகிறது, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க நீங்கள் பந்தயத்தில் ஈடுபட விரும்புவீர்கள். மிகவும் குழப்பமான வார்த்தைகள் எல்லாம் எதுவும் இல்லை, எனவே நீங்கள் இதனை எளிதாக அணுகலாம்.

புகழ்பெற்ற ஆங்கில குழந்தைகள் எழுத்தாளர், எனிட் மேரி பிளைடன் (1897 – 1968), மிகவும் வெற்றிகரமான தொடர்ச்சியான நூல்களைப் பதிப்பித்தவர். அவருக்குப் பின்னால் ஒரு கவர்ச்சிகரமான பின்னணி இருக்கிறது. விக்கியின் கூற்றுப்படி, அவரது முதல் கதை 1947 இல் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து பல வெற்றிகரமான புத்தகங்கள் வெளிவந்தன. அவரது படைப்புகள் உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்தின, மேலும் அவர் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளராக 4 வது இடத்தைப் பிடித்தார் – ஒரு நம்பமுடியாத சாதனை!

நான் இதை என் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கிறேன், உங்கள் குழந்தைகளும் படிக்க பரிந்துரைக்கிறேன்.

தமிழகத்தில் குழந்தைகள் இடைய பரவலாக புழங்க விடப்படும் போதை பற்றிய செய்திகள் நம் சமூகத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கின்றன. குழந்தைகளை புனைவின் போதை தொடரட்டும், நார்காட்டிக்ஸ் போதை அல்ல. இனிமையான வார இறுதியாக இது அமையட்டும்.

I’m participating in the #TBRChallenge 2024 by Blogchatter

இனக் கேடர் | இடாலோ கால்வினோ (மொழிமாற்றச் சிறுகதை)


தன் குடிமக்கள் அனைவருமே திருடர்களாகக் கொண்ட ஒரு நாடு இருந்தது.

இரவில் எல்லோரும் மாற்றுச் சாவிகளை எடுத்துக்கொண்டு, லாந்தர் விளக்குகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, அக்கம் பக்கத்து வீட்டில் திருடச் சென்றுவிடுவர். திருடிய பொருள் மூட்டைகளுடன் அவர்கள் விடியற்காலையில் திரும்பி வந்து பார்க்கும்போது, அவர்களின் சொந்த வீட்டில் களவு போயிருக்கும்.

எல்லோரும் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், யாரும் எதையும் இழக்கவில்லை, ஏனென்றால் ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து திருடினார்கள், அந்த மற்றவர் மீண்டும் இன்னொரு மற்றவரிடமிருந்து திருடினார், கடைசி நபர் முதலில் திருடிய நபரிடம் திருடும் வரை இந்த திருட்டுச் சங்கிலித்தொடர் நீண்டு கொண்டு போனது. அந்நாட்டில் வர்த்தகம் என்பது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரின் பக்கங்களையும் ஏமாற்றுவதாக ஆனது, தவிர்க்க முடியாமல்! அந்த அரசாங்கம் என்பது அதன் குடிமக்களிடமிருந்து திருடும் ஒரு குற்றவியல் அமைப்பாக இருந்தது. குடிமக்களும் தங்கள் பங்கிற்கு அரசாங்கத்தை ஏமாற்றுவதில் மட்டுமே ஆர்வம் காட்டினர். இதனால் வாழ்க்கை சீராகச் சென்றது, யாரும் பணக்காரர் இல்லை, யாரும் ஏழைகளும் இல்லை.

இப்படிச் சென்று கொண்டிருந்த வேளையில் என்ன நடந்ததோ, ஒரு நாள், ஒரு நேர்மையான மனிதர் அந்த நாட்டில் வசிக்க வந்தார். இரவில் சாக்கு மற்றும் விளக்குடன் களவாங்கச் செல்வதற்கு மாற்றாக, புகைபிடிப்பதற்கும் நாவல்களைப் படிப்பதற்கும் அவர் வீட்டிலேயே தங்கினார்.

திருடர்கள் வந்தனர், விளக்கு எரிவதைப் பார்த்தனர் எனவே உள்ளே செல்வதைத் தவிர்த்துவிட்டனர்.

இது சிறிது காலம் நீடித்தது: பின்னர், அவர் எதையும் செய்யாமல் அங்கே வாழ விரும்பினாலும், மற்றவர்கள் தங்கள் களவு தர்மத்தைச் நிறைவேற்றுவதைத் தடுக்கக்கூடாது என்பதை அவருக்கு விளக்க வேண்டிய கட்டாயம் அக்குடிமக்களுக்கு ஏற்பட்டது. அவர் வீட்டில் கழித்த ஒவ்வொரு இரவும் ஏதோ ஒரு குடும்பத்திற்கு மறுநாள் சாப்பிட எதுவும் இல்லாமல் ஆக்கியது.

நேர்மையான மனிதர் அத்தகைய நியாயத்தை எதிர்க்கவில்லை. அவரும் பிறரைப் போலவே மாலையில் வெளியே சென்று மறுநாள் விடியலில் திரும்பி வந்தார், ஆனால் அவர் திருடவில்லை. அவர் நேர்மையானவர். அவருடைய இந்த குணத்தைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய இயலாது. அவர் பாலம் வரை சென்று கீழே ஓடை நீர் பாய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவர் வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைத் தெரிந்து கொண்டார்.

அடுத்த ஒரே வாரத்திற்குள் அந்த நேர்மையான மனிதர் தான் பணமில்லாமல் இருப்பதை உணர்ந்தார், அவரிடம் சாப்பிட எதுவும் இல்லை, அவருடைய வீடு காலியாக இருந்தது. ஆனால் இது ஒரு சிக்கலாக இருக்கவில்லை, ஏனெனில் இது அவர் தெரிந்தே செய்த தவறு; இல்லை, சிக்கல் என்னவென்றால், அவரது குணம்தான் மற்ற அனைத்து வருத்தங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. ஏனென்றால், யாரிடமும் எதையும் திருடாமல், தன்னிடம் இருந்த அனைத்தையும் மற்றவர்கள் திருடிக்கொள்ள அவர் அனுமதித்தார்; இந்த சிக்கலுக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. இரவு திருடச் சென்று விடியற்காலையில் வீட்டிற்கு வந்த யாராவது ஒருத்தர் தன் வீடு தீண்டப்படாமல் இருப்பதைக் கண்டார்: அந்த வீட்டை நேர்மையாளர் கொள்ளையடித்து அந்நாட்டின் களவு நீதியை நிலைநாட்டி இருந்திருக்கவேண்டும். ஆனால் இல்லை அல்லவா! எப்படியிருந்தாலும், சிறிது காலத்திற்குப் பிறகு, திருடப்படாதவர்கள் மற்றவர்களை விட தங்களை பணக்காரர்களாக உணர்ந்தனர், மேலும் திருட விரும்பவில்லை. அதே நேரத்தில் நேர்மையானவரின் வீட்டில் திருட வந்தவர்கள் எப்போதும் காலியாக இருப்பதைக் கண்டனர்; நிலைமையை மோசமாக்கும் விதத்தில் அவர்கள் ஏழைகளாகப் போனார்கள். 

இதற்கிடையில், பணக்காரர்களாக மாறியவர்கள், நேர்மையாளரின் வழக்கத்தைப் பார்த்து இரவு நேரத்தில் பாலத்திற்கு அடியில் தண்ணீர் ஓடுவதைப் பார்ப்பதைத் தங்கள் வழக்கமாக்கிக் கொண்டனர். இது குழப்பத்தை அதிகரித்தது, ஏனென்றால் பலர் பணக்காரர்களாகவும், பலர் ஏழைகளாகவும் மாறினர்.

இப்போது பணக்காரர்கள் பார்த்தார்கள், இப்படி தினமும் இரவில் பாலத்திற்குச் சென்றால் விரைவில் ஏழைகளாக்கிவிடுவார்கள். என்ன செய்யலாம் என்று நினைத்தபோது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது: ‘சரி, நம் சார்பில் போய் கொள்ளையடிக்க ஏழைகளுக்கு பணம் கொடுத்தால் என்ன?’ அவர்கள் ஒப்பந்தங்கள், நிலையான சம்பளம், சதவீதங்கள் என்பனவற்றை உருவாக்கினர்: அவர்கள் இன்னும் நிச்சயமாக திருடர்கள்தான், அவர்கள் இன்னமும் ஒருவரையொருவர் ஏமாற்ற முயன்றனர். ஆனால், வழமை போலத் தோன்றினாலும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் மாறினர்.

பணக்காரர்களில் சிலர் பெரும்பணக்காரர்களாகி விட்டனர், அவர்கள் பணக்காரர்களாக இருக்க அவர்கள் திருடவோ, அல்லது அவர்களுக்காக மற்றவர்கள் திருடித் தரவோ தேவையில்லாமல் போனது. ஆனால் அவர்கள் திருடுவதை நிறுத்தினால், பிற ஏழைகள் அவர்களிடமிருந்து திருடிக் கொண்டிருப்பதன் காரணமாக, இந்தப் பணக்காரர்களும் ஏழைகளாகி விடுவார்கள் அல்லவா.  எனவே அவர்கள் மற்ற ஏழைகளிடமிருந்து தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க ஏழைகளிலேயே மிகவும் ஏழ்மையானவர்களுக்கு பணம் செலுத்தத் தொடங்கினர், ஒரு காவல் துறையை அமைப்பதற்கும் சிறைகளைக் கட்டுவதற்கும்.

எனவே நேர்மையானவர் அங்கே வந்து சில வருடங்கள்தான் கழிந்தது. மக்கள் திருடுவதையும் திருட்டுக் கொடுப்பதையும் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டனர், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் வேறுபாட்டைப் பற்றி மட்டுமே பேசினர்; ஆனால் அப்போதும் அவர்கள் அனைவரும் திருடர்களாகவே இருந்தனர்.

ஒரே ஒரு நேர்மையான மனிதர் ஆரம்பத்தில் தனியராக இருந்தார், அவர் மிகக் குறுகிய காலத்திலேயே இறந்து போனார் – பசிக்கொடுமையால்!

சிலிக்கான் ஷெல்ஃப் இடாலோ கால்வினோ: Black Sheep கதையைப் பதிவிட்டு, யாராவது மொழி பெயர்த்து இருக்கிறீர்களா என்று கேட்டிருந்தார். அதற்காக இந்தப் பதிவு.

Yoko Ogawa வின் The housekeeper and the professor


ஒரு புத்தகம் என்பது அதன் தொடக்கத்திலிருந்து 20% தாண்டுவதற்குள் வாசகனை உள்ளிழுக்க வேண்டும். இல்லை என்றால், எந்த வருத்தமும் இல்லாமல் அதை ஒதுக்கி வைப்பது நல்லது. என்னதான் இருந்தாலும் நாமெல்லாம் மனிதர்தானே? பிரசுரமான அனைத்தையும் படித்தே தீரவேண்டும் என்று கட்டியம் சொல்லிக்கொண்டா பிறந்திருக்கிறோம்?

ஆனால் ஒரு கதை தனது முதல் பக்கத்திலேயே ஒரு வாசகனை விழுங்கி, அதன் ஆசிரியரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அந்தக் கற்பனை உலகிற்குள் அவனை இறக்கிச் சுழற்றிவிட முடியுமா? முடியும். சந்தேகம் இருந்தால், இந்த நாவலை வாசித்துவிடுங்கள்.

யோகோ ஓகாவாவின் “தி ஹவுஸ் கீப்பர் அண்ட் தி ப்ரொஃபசர்” (2006) – இந்த நாவல் ஒரு கணித பேராசிரியரைப் பற்றியது, அவர் தனது புதிய நினைவுகளை 80 நிமிடங்கள் மட்டுமே நினைவில் வைத்திருக்க முடியும். அவரது நீண்ட கால நினைவுகள் 1970 களிலேயே நின்றுவிட்டன, சாலை விபத்து காரணமாக.

இல்லப் பணிப் பெண்களால் அவரது கிறுக்குத்தனத்தை சகித்துக்கொண்டு வேலை செய்ய முடியவில்லை. எனவே அவர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். இறுதியாக ஒரு பணிப்பெண் பேராசிரியரின் வீட்டை அடைகிறாள், மற்றொரு இல்லப் பணிப்பெண்ணாக. அவர்தான் இந்நாவலின் கதை சொல்லி. முழு உலகமும் அவருக்கு கணிதம்தான் என்பதைப் புரிந்துகொள்கிறாள்.

ஒரு நாள், அவளுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான் என்பதை பேராசிரியர் அறிந்து கொண்டார். தினமும் இரவு வெகுநேரம் வரை அம்மகனை வீட்டில் தனியாகக் காத்திருக்க வைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறார். அவள் தன் பணியையும், அவர்களின் வாடிக்கையான வாழ்க்கையையும் காண்பித்து அவரைச் சமாதனம் செய்யும்பொழுது, அவர் கோபமடைந்து, அடுத்த நாள் முதல் அவளது மகனை பள்ளியிலிருந்து நேரடியாக தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு பணிக்கிறார். அடுத்த நாள் அந்தப் பையன் வரும்பொழுது, அவனது தட்டையான hair style ஐ ஒத்திருக்கும் படியாக பேராசிரியர் அவனுக்கு “ரூட்” √¯¯ என்று செல்லப்பெயர் சூட்டுகிறார். அப்போதிருந்து, கதை 4 நபர்களிடையே சுழல்கிறது – பேராசிரியர், இல்லப் பணிப்பெண், அவரது மகன் மற்றும் பேராசிரியரின் மைத்துனி.

கதை ஒரு அமைதியான தொனியில் தொடங்குகிறது. பெரிய சாகசங்கள் அல்லது வியத்தகு திருப்பங்கள் எதுவும் இல்லாமல் நீரோடை அதன் சொந்த வழியைக் கண்டுபிடிப்பதுபோல பயணித்துச் செல்கிறது. இந்த நாவலின் ஒவ்வொரு காட்சிகளையும் எண்கள் இணைக்கின்றன. எண் பேராசிரியரைக் கவர்கிறது. அவர் மூலமாக இது பணிப்பெண் மற்றும் அவரது மகனையும் ஈர்த்துக்கொள்கிறது. அவள் எண்களுக்குப் பின்னால் செல்லத் தொடங்குகிறாள் மற்றும் அவளைச் சுற்றி எண்களின் ஒளியை நெசவு செய்யத் தொடங்குகிறாள்.

பிரபஞ்சம் முழுவதும் அதன் வடிவத்திலும் வண்ணங்களிலும் பரவிய ஒரு சரிகை (lace) போல, தொலைதூர அடிவானத்திலிருந்து யாரோ நெசவு செய்யத் தொடங்குவது போல, வாசகனுக்கு எண்களைக் காட்சிப்படுத்த ஆசிரியர் முயல்கிறார். அந்த சரிகை வலைக்குள் ஒவ்வொரு கணிதவியலாளரும் அந்த முடிவற்ற சரிகைக்குள் தங்கள் சொந்தக் கதிர்களை உமிழ முயற்சிக்கிறார்கள்.

இந்தியக் கணிதவியலாளரான ஆர்யபட்டாவின் கண்டுபிடிப்பு பற்றிய குறிப்பு கூட உள்ளது. கிரேக்கக் கணிதத்தையும் இந்தியக் கணிதத்தையும் இணைக்கும் விதம், இந்த 0 எவ்வாறு கணிதம் செய்யும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ரசிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

இந்த நாவலில் பல இடங்கள் எனக்கு பிடித்திருந்தன, குறிப்பாக –

  • முடிதிருத்தும் கடையிலிருந்து வரும் வழியில் பூங்காவின் அழுக்குத் தரையில் பேராசிரியர் ஒரு குச்சியைக் கொண்டு மீது Artin’s conjecture எழுதிக் காட்டுவது.
  • பணிப்பெண் சமையல் செய்யும் போது அல்லது டம்ப்ளிங் செய்ய பூரணம் வைக்கும்போது அவளுடைய கையையே உற்றுப் பார்ப்பது! காய்கறி வெட்டும்போதும், சாம்பார் கிண்டிவிடும்போதும் நான் உட்கார்ந்து என் அம்மாவை பார்த்துக் கொண்டிருப்பேன் 🙂 துள்ளியமா? அல்லது தாளமா? எது அதை சுவாரஸ்யமாக்குகிறது?
  • கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல – Euler’s identity சூத்திரத்தை ஒரு குறிப்பில் எழுதி, தனது மைத்துனி மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடனான மோதலை பேராசிரியர் முடிக்கும் விதம் வாசகரை ஆழமாகத் தொடுகிறது. கணித இணைப்பு ஒரு மர்மமாக இருந்தாலும், அது அவர்களின் உறவில் அவர் வைத்திருக்கும் மதிப்பைப் பற்றி பேசுகிறது.

அவ்வளவு நேர்த்தியான மொழியாக இருந்தது, அலங்கார வார்த்தைகளால் வெடிக்காமல், கதையின் பலமே பயனர்களை மயக்குகிறது.

எனது பரிந்துரை: பரிந்துரைக்கிறேன்

Reco by: ReadingnationSg to celebrate Sakura / cherry blossoms of Japan.

I’m participating in the #TBRChallenge 2024 by Blogchatter

BlogChatterA2Z 2024 – கருப்பொருள் அறிவிப்பு


2024க்கான BlogChatterA2Z பதிவுலக சவாலில் பங்கேற்கிறேன். கடைசியாக 2022ல் பங்கேற்றேன். 2023ல் பணிச் சூழல் காரணமாக பதுங்க வேண்டிய சூழல். இந்த ஆண்டிற்கு முன்னரே கொஞ்சம் தயார் செய்து வைத்துவிட்டேன் என்பதால் பெரும் சவால் வந்துவிடாது.

இந்த சவாலின் ஒரு பகுதியாக, ஒரு மாதத்திற்குள் 26 இடுகைகளை எழுத வேண்டும். மேலும், சக வலைப்பதிவாளர்களின் பதிவுகளைப் படித்து, கருத்துகளை இடுவதன் மூலம் அவர்களையும் ஊக்குவிக்க முயல்வேன்.

இந்த 26 பதிவுகளில் ஒரு சிறுகதை மூலம் உங்களைக் கவர எண்ணுகிறேன்.

எஃகு தண்டவாளங்களின் அமைதியான பின்னணியில் ஒரு காதல் கதை விரிவடைகிறது, அங்கு திருடப்பட்ட இதயங்கள் பேசும் கிசுகிசுப்பான வார்த்தைகள் என்றென்றும் மாறாத உறுதிமொழியை உதிர்கின்றன. உங்கள் இதயம் அவர்களுடன் ஒத்திசைக்கும் என்று நம்புகிறேன்!

Whispers on the Train

This image has an empty alt attribute; its file name is whispers-on-the-train-pandian-ramaiah-bingcopilot-image-01.jpg

Chapter 1: Amber Embrace and Emerald Fields
Chapter 2: Broke by the Crossing
Chapter 3: Comfort in Chaos
Chapter 4: Downpour Disappointment
Chapter 5: Embarrassed Grins
Chapter 6: Fluttering Hearts
Chapter 7: Glowing Glimmer
Chapter 8: Hidden Laughter Beneath the Banyan
Chapter 9: Impromptu Errand
Chapter 10: Journeys of the Heart
Chapter 11: Knowing Smiles
Chapter 12: Luminous Smiles and Lingering Hopes
Chapter 13: Mellowing Moments
Chapter 14: Nearing the edge
Chapter 15: Omen of Doubt
Chapter 16: Platform Whispers
Chapter 17: Quieted Whispers
Chapter 18: Rain of Uncertainty
Chapter 19: Separated by Steel Tracks, United by Dreams
Chapter 20: Toil and Turmoil
Chapter 21: Unshed Tears
Chapter 22: Vanishing Tracks
Chapter 23: Whispered Rebellion
Chapter 24: X marks the Matriarch
Chapter 25: Yardstick of Courage
Chapter 26: Zape of Spice, Zing of Love

ஆங்கிலப்பதிவான dwaraka வில் ஏப்ரல் 1 முதல் வெளிவரும். நான் முயற்சி செய்கிறேன்! அது எப்படி வருகிறது என்று பார்ப்போம்!

Lahore by Manreet Sodhi Someshwar (நூல் அறிமுகம்)


மன்ரீத் சோமேஷ்வரின் லாகூர் (2021), அவரது பிரிவினைகால முக்கதைகளில் முதல் கதை, இந்தியப் பிரிவினை மற்றும் அதைத் தொடர்ந்து சுதந்திரம் பெற்ற அதிர்ச்சிகரமான காலகட்டத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லும் ஒரு வரலாறு கலந்த புனைகதை.

நேரு, வல்லபாய் படேல், மவுண்ட்பேட்டன் – எட்வினா தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் பமீலா ஆகியோரை ஒரே பாதையில் உள்ளடக்கிய வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சிபாய் மாலிக், கிஷன் சிங்கின் மகளுடனான அவரது குறையாத அன்பை சித்தரிக்கும் லாகூரின் கதை, பெலிராமுடனான அவரது பசுமையான நட்பு – இந்த இரண்டு இணையான கதைகளின் மூலம் நாவல் விரிவடைகிறது.

பிரிவினையின் ரத்தம் சொட்டும் காட்சிகளையும் அதன் பின்விளைவுகளையும் புனைகதை காட்ட முயல்கிறது. இது ஒரு அத்தியாயத்தில் இரத்தக்களரி மோதலை விவரிக்கிறது மற்றும் அடுத்த அத்தியாயத்தில் நேர்த்தியாக உடையணிந்த மவுண்ட்பேட்டன் மற்றும் எட்வினாவை சித்தரிக்கிறது, இது மேற்கின் பிரித்து-ஆளும் கொள்கையால் பயன்பெற்றது யார்? அவதிப்பட்டது யார்? என்கிற வேறுபாட்டைக் காட்டுகிற உத்தியைக் கையாண்டு இருக்கிறது.

இந்தப் புனைகதையை வாசிக்கும்போது ஆசிரியரின் ஆராய்ச்சியின் முயற்சியை வாசகன் உணரமுடியும். ஆனால் அதைப் பற்றி எழுதும்போது நாம் நேர்மையாக இருக்க வேண்டும் அல்லவா.

எழுத்தாளர் வரலாற்றையும் புனைகதையையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் அது புனைகதை அல்லாத பகுதியை ரொம்பவே சார்ந்துள்ளதாக என்னை நினைக்க வைக்கிறது. புனைகதை அல்லாத பகுதியிலிருந்து வரும் சம்பவங்கள், கிட்டத்தட்ட அனைவருக்கும் ஏற்கனவே தெரியும். எனவே, புத்தகத்தின் பாதி நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றைப் பற்றியதா (சிலவற்றைத் தவிர)? அவற்றை எடுத்துவிட்டால் எஞ்சுவது கொஞ்சமே.

வேறு விதமாக இதைப் பார்க்கலாம். வரலாற்றுப் பகுதி ஆசிரியரின் முழு சக்தியை உறிஞ்சிவிட்டதால், புனைகதை பகுதியின் மீதான அவரது அழுத்தத்தைத் தவற விட்டுவிட்டதோ.

கதையில் பல உருது, பஞ்சாபி, ஹிந்தி வார்த்தைகள் உள்ளன, அவை வாசகர்களின் கவனத்தை அடிக்கடி மாற்றுகிறது. குறிப்பாக அந்த மொழிகள் தெரியாதவர்களின் வாசிப்பை ஆரம்பத்தில் சவாலாக மாற்றுகிறது. ஆனால், கதைக்கு உள்ளுர் உணர்வைச் சேர்ப்பதால், வாசகன் கண்டு கொள்ள மாட்டான் என்று ஆசிரியர் கருதியிருப்பார். நான் கண்டு கொல்லவில்லை. ஆனால் இந்த முத்தொகுப்பின் அடுத்த புத்தகத்தில் நான் தொடர்ந்து செய்வேனா, தெரியவில்லை!

மொத்தத்தில், இந்த நூலைப் பொறுத்தமட்டில் ஒரு ஆரம்ப நிலை வாசகனாக neutral ஆக இருக்கிறேன். சிபாரிசு பட்டியலில் இப்போதைக்கு இல்லை.