“திட்டாதே அம்மா! மணிக்குட்டி வருத்தப்படுவாள். என்ன மணிக்குட்டி, இவன் பாவம், உன் தம்பியல்லவா பொறாமைப்படக்கூடாது..” மணிக்குட்டி விழித்துப் பார்ததாள். இது எவ்வளவு பெரிய துன்பம்! சின்னத்தம்பியை அம்மா தன்னுடனேயே வைத்துக்கொண்டு படுப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் அழுதபோது, “என்னடீ, நீ அக்கா அல்லவா, அழுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லை!..?” என்று அம்மா அதட்டினாள். சரி போகட்டும் யாருடனும் எதுவும் பேசவேண்டாம் என்று நினைத்தாள்.. “கவலையாக ஒரு மூலையில் இப்படி உட்கார்ந்து ஏன் தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய்..?” என்று மீண்டும் புத்தி சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்!
-எனக்கொரு கதை சொல்
பூக்கதைகள்
ஆசிரியர்: ஜெ தேவிகா (மலையாளம்)
தமிழாக்கம்: யூமா வாசுகி
பதிப்பு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை – நான்காம் பதிப்பு ஜுன் 2015.
NLB முன்பதிவு: Pūkkataikaḷ / Je. Tēvikā ; mol̲iyākkam, Yūmā Vācuki.
கன்னிமாரா முன்பதிவு: இல்லை
இது ஒரு சிறுகதைத் தொகுப்பு. இதில் மொத்தமாக 4 சிறுகதைகள் உள்ளன.
முதல் சிறுகதை – எனக்கொரு கதை சொல்.
மணிக்குட்டிக்குத் தம்பிப் பாப்பா பிறந்ததால் தனிமையாக உணர்ந்தாள். அதை எல்லாம் மாற்ற செம்பருத்திப்பாட்டி கதை சொல்லி மாற்ற வந்தாள்.
இந்தக் கதை என் வாழ்க்கையோடும் பொருந்தி வந்தது. ஏனென்றால் எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான். என் தாயும் தந்தையும் அவனைத் தான் எப்பொழுதும் பார்த்துக்கொள்கிறார்கள். என்னை அவர்கள் பார்த்துக் கொள்வது இல்லை. எனவே மணிக்குட்டி மாதிரி நானும் தனிமையாக உணர்கிறேன். தம்பி ஒரு சின்னப் பையன். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. அதனால் என்னுடைய தாயும் தந்தையும் அவனைத்தான் கவனித்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவது கதை – ஆகாயத்துப் பெண்ணும் பூலோகத்துப் பையனும்
இது செம்பருத்திப் பாட்டி மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. இது ஒரு பேராசைப் படும் பெண்ணைப் பற்றியது. சூரியன் மாமா ஒரு வானவில்லை ஆகாயத்துப் பெண்ணுக்குப் பரிசாகத் தருவான். பூலோகத்துத் தம்பி அதை விளையாடக் கேட்பான். அவனை ஏமாற்றி விடுவாள். சூரியன் மாமா அவளுடைய மனதை மாற்ற ஒரு தந்திரம் செய்கிறான்.
வானவில் எப்படி உருவாகிறது என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை இது.
மூன்றாவது கதை – மழை மேகமும், குறிஞ்சிப் பையனும்
இது செம்பருத்திப் பாட்டியின் தோழியான மழை மேகம் மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. இது அக்காவிற்கும் தம்பிக்கும் உள்ள பாசத்தைப் பற்றிய கதை. அக்கா மழை மேகம். தம்பி குறிஞ்சிப்பூ. அம்மா நீலமலை. காற்று ஊதித் தள்ளிய தன் அக்காளைக் கூட்டி வர குறிஞ்சிப் பூ தம்பி எப்படி மீட்கிறான் என்று நான் படித்தேன்.
தமிழகத்தின் நீலகிரி மலையில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூவை அடிப்படையாகக் கொண்ட கதை இது.
நான்காவது கதை – முத்தும் பவழமும்
இது செம்பருத்திப் பாட்டியின் இன்னொரு தோழியான பவழமல்லிப் பாட்டி மணிக்குட்டிக்குச் சொல்கிற கதை. சூரிய அக்காவும், சந்திர தம்பியும் எப்பொழுதும் சேர்ந்து இருக்க விரும்புவார்கள். ஆனால் சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே நேரத்தில் வராது அல்லவா? இயற்கை தேவதை இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்து, அக்கா தம்பியை ஒன்றாக சேர்க்கிறாள் என்பதே கதை.
பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட கதை இது.
இந்தக் கதைகள் மணிக்குட்டியின் மனதை மாற்றியதா? அவள் தம்பிமீது பாசம் கொண்டாளா? என்பதை வாசித்துத் தெரிந்து கொள்க.
அன்புடன்
கண்ணன்.