வேண்டுக, வந்தாகவேண்டும்.
விழைக, பொழிந்தாகவேண்டும்.
அறம்நின்று ஆணையிடுக, அமுதாகிச் சுரந்தாகவேண்டும். நீர் ஒரு வாக்குறுதி. ஒரு கருணை. ஒரு பேரருள். நீரென்றாகியது பருவெளியின் கனிவு. கற்பாறைகளும் கடுமண்ணும் அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன?
– கிராதம்
வருணனைப் பற்றிய ஜெயமோகனின் வர்ணனைகள் இவை. தகிக்கும் கோடையில், எங்கள் விழைவிற்கு வருணன் இசைந்தது போலப் பெய்த கோடை மழையின் ஊடே மோட்டார் பைக்கில் சுற்றித் திரிந்த கதை இது. கண்ணனை எழுதச் சொன்னேன். புல்வயல், குடுமியான்மலை அன்று பார்த்தது போல இன்றும் அப்படியேதான் இருக்கிறது.
கொடும்பாளூரின் தற்கால தோற்றம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. நேர்த்தியாக தோட்டமிட்டுள்ளார்கள். கல் தளம் வைத்து பாதை வைத்துள்ளார்கள். புல்வெளி பார்ப்பதற்கு மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது. தொல்லியல் துறையின் புத்தக வெளியீடுகள் விற்பனைக்கு உள்ளன. (நுழைவுக் கட்டணம் 15 ரூபாய்).
மூவர் கோயிலில், ‘சுந்தர சோழனின் சிற்றரசனான இருக்குவேள் அரசன் பூதி விக்கிரம கேசரி கட்டியது’ என்று தொல்லியல் துறையின் பலகையில் வாசித்த உடன் சஞ்சய், ‘சுந்தர சோழன் ராஜராஜனின் அப்பா’ என்று பதிலளித்தான். ஒரு வரி பதில்தான் என்றாலும் எங்களுக்கு ஒரு காலக்கோடு கண் முன்னே வந்து நின்றது. அதாவது, ராஜ ராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைக் காட்டிலும் காலத்தால் முந்தையது.
நகரம் முழுதாய் அழிந்து, அமைதியாய் இங்கே உறங்கிக் கொண்டுள்ளது.
இனி கண்ணன் எழுதியது
எங்களுக்கு ஒரு நல்ல பயணம் அமைந்தது. நாங்கள் மொத்தமாக 4 இடங்களைப் பார்த்தோம்.
- பழங்கால சிவன் கோயில், புல்வயல்
- நாயக்கர் கால சிவன் கோயில், குடுமியான்மலை
- மூவர் கோயில், கொடும்பாளூர்
- ஐவர் கோயில், கொடும்பாளூர்
பழங்கால சிவன் கோயில், புல்வயல்
பாதி இடிந்து போய்விட்டது. முக்கியமாக கோபுரம் இடிந்து இருந்தது. அங்கே ஒரு பெரிய சிவன் கோயிலும் அதைச் சுற்றிச் சிறிய பரிவாரக் கோயில்களும் இருந்தன. இந்தக் கோயிலை யாரும் தற்போது வழிபடுவதில்லை.
நாயக்கர் கால சிவன் கோயில், குடுமியான்மலை
நாங்கள் சிவன் நரசிம்மர் இன்னும் பல சிற்பங்கள் பார்த்தோம். அங்கே ஒரு மலை இருந்தது. மலையில் 63 நாயன்மார்கள் சிற்பங்கள் சிவன் பார்வைதி இருந்தன.
மூவர் கோயில், கொடும்பாளூர்
அங்கு மூன்று கோயில்கள் இருந்தன. ஆனால் ஒரு கோயில் இடிந்து இருந்தது. அங்கே ஒரு அழகான தோட்டமட் இருந்தது.
ஐவர் கோயில், கொடும்பாளூர்
ஐவர் கோயிலில் ஐந்து கோயில்கள் இருந்தன (ஒரே தளத்தில்). ஆனால் எல்லாம் இடிந்து உள்ளன.