நான்கு நாள் தொடர் விடுப்பு வருவதென்பது, காவிரியில் நீர் வருவது போன்று அரிது. அதிலும் இரண்டு நாட்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தால், நானே குடும்பத்திற்கு ஒரு சுமையாகிப் போய்விடுகிறேன். சிங்கை தேசீய நாள் மற்றும் பக்ரீத் விடுமுறையின் மூன்றாவது நாளை இழக்க விரும்பாமல், மக்களை எங்காவது அழைத்துக்கொண்டு போனால் என்ன என்று தோன்றியது.
உடன் பணிபுரிபுரியும் நண்பர் நெடு நாட்கள் முன்னரே கூறியிருந்தார். மனதில் ஓடிக்கொண்டிருந்தது. செல்லத்தான் நேரம் கூடிவிரவில்லை. இதை விட வேறு நன்னேரம் வருமா என்ன?
புங்கோல் செட்டில்மெண்ட் வரை மகிழுந்தில் சென்று விட்டு அங்கிருந்து மூன்று வாடகை சைக்கிள்களை அமர்த்திக்கொண்டு தீவினை ஒரு வலம் வர மூன்று மணி நேரம் பிடித்தது. இன்றும் சற்று நேரம் இருந்துவிட்டு வர விருப்பத்தான். சைக்கிள் வாடகை நச்சு போன்றல்லவா ஏறிக்கொண்டிருக்கிறது!
உலகப்போர் நினைவுச் சின்னம் அருகில் உள்ளது. அங்கிருந்து ஒரு அரை கிலோமீட்டர் சைக்கிளில் அழுத்தினால் தீவின் மேற்கு வாயில் வந்துவிடுகிறது.
நிறைய பட்டாம்பூச்சிகள் அலைவதாக சொல்கின்றனர். நாங்கள் பேருக்கு ஒன்றிரண்டைக் காண முடிந்தது. அதிலென்றுதான் மேலே உள்ளது. ‘படமா புடிக்கிற. இருடி..’ என்று போக்குக் காட்டியது. இது கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய வரட்சிக் காலம் என்று சொல்கிறார்கள். செடிகள் அனைத்தும் வதங்கிக் கிடக்கின்றன. சவுக்குத் தூசிகளும் வெப்பமும் காட்டுத் தீயினை அல்லவா கொண்டு வரும்.
குளத்தாங்கரை போன்ற கடற்கரைப் பகுதி. பார்க்க அழகாக இருக்கிறது. மக்கள் அதிகம் வருவதில்லை என்பதால் மணல் பகுதி தீண்டப்படாமல் கிடக்கிறது. காலணியை கழற்றிவிட்டு நடை பயில ஏதும் தடை இல்லை!
வீடுகள் ஏதுமில்லா இந்தத் தீவினை இயற்கைக்கென்றே விட்டு வைத்துள்ள காலம் நீடிக்கும் என்று நம்புவோம்.
ஆனால் மணல் ஈ தொந்தரவு உள்ளதாகச் சொல்கிறார்கள். எனவே முழுக்கால் பேண்ட் அணிந்து செல்வது உத்தமம்.
தீவு முழுக்க தண்ணீரோ, மின்சாரமோ கிடையாது. எனவே தக்க ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். அனைத்தையும் கட்டியே எடுத்துச் சென்றுவிட்டோம். கடற்கரையில் மதிய உணவை உண்டுவிட்டு, குப்பையை பையோடு எடுத்துவந்து தீவிற்கு வெளியில் போட்டுவிட்டார் சிந்து.
இத்தீவிலிருந்து ஜுரோங் ஏரியை இணைக்கும் 36 கிலோமீட்டர் சைக்கிள் பாதையில் பயணம் செய்ய ஆசை. ஆனால் கண்டிப்பாக வாடகை சைக்கிளில் அல்ல!!
கடுமையான வெயில். நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக அருந்திக்கொண்டு, சைக்கிளை மிதித்துக்கொண்டு வந்து சேர்ந்தோம். தாக்கம் கொஞ்சமாவது குறைய மழை வேண்டும். பெய் என்று சொல்லவோர் ஆளில்லை.
எப்படிப் போவது?
வழித்தடத்தில் நிறைய கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன. எனவே நிறைய சாலைகள் மூடப்பட்டுள்ளன. எனவே மகிழுந்தில் செல்வது இப்போதைக்கு உத்தமம். திரும்பி வரும்பது புங்கோல் பாயிண்ட் இருந்து புங்கோலுக்கு பேருந்து உள்ளது.
கவனிக்க:
- நீர் கொண்டு செல்க. பைப் தண்ணீர் எங்கும் இல்லை.
- உணவு கொண்டு செல்க. குப்பையை எடுத்து வந்துவிடுங்கள்
- உச்சி வெயிலுக்கு தொப்பி உகந்தது.
- முழுக்கால் பேண்ட் (உடற்பயிற்சி ஆடை) உகந்தது