Duryodhana (c) respective artist

தீயின் எடை | ஜெயமோகன்


பானுமதி “அங்கே பாண்டவ மைந்தர்கள் நோயுற்று படுத்திருந்தனர். அவர்கள் எண்மரையும் கொன்று அனலூட்டிவிட்டார் அஸ்வத்தாமன். பாஞ்சாலர்களாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் கொல்லப்பட்டார்கள்” என்றாள். காந்தாரி “தெய்வங்களே, என் குடியின் மைந்தரை முற்றழித்துவிட்டீர்களே! தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என வீறிட்டாள்.

தீயின் எடை – 56

தீயின் எடை | ஜெயமோகன்
இணையத்தில் வாசிக்க –

ஒரு பெரும் மைல்கல்லைத் தாண்டியிருக்கிறது வெண்முரசு. பாரதப் போர் முடிந்துள்ளது. மிகுந்த விருவிருப்புடன் தொடங்கிய இந்தப் போர் 18 நாட்களைத் தாண்டி 22ஆவது நாவலில் முடிந்துள்ளது. சகுனி, சிகண்டி, திருஷ்டத்யும்னன் மற்றும் உபபாண்டவர்கள் வீழ்ந்துவிட்டனர். துரியோதனன் வீழ்ந்திருக்கிறான்.

இந்நூலின் மூன்று பகுதிகளை ஆர்த்மார்த்தமாக வாசித்தேன். அதனைச் சொல்வதற்காக இந்தப் பதிவு.

சூழ்ச்சியின் வீழ்ச்சி

shakuni4jpg

ஒவ்வொருவரின் வீரமரணத்திற்கு முன்னதாக அவர்களைப் பற்றிய மீள்நிகழ்வு ஒன்றை வெண்முரசு தரும். கர்ணன், சுபாகு, துச்சாதனன் என்று அனைவருக்கும். அப்படி ஒரு மீள்நிகழ்வு வாசிக்கும்போது, அதன் இறுதியில் நிகழும் அந்த வீரமரணம் அடர்த்தி கொள்கிறது.

சகுனியின் முன்கால நினைவலைகள் மிக அழகிய வடிவில் தந்துள்ளது. அனேகமாக சகுனியைப் பற்றிய அழகியல் எழுத்தாக வெண்முரசு மட்டுமே தமிழில் இருக்கும் என்று நினைக்கிறேன். அவ்வுலகில் இருக்கும் சகுனியின் ஆன்மா, அதற்காக ஜெயமோகனை வாழ்த்தும்!

சகுனியின் மனைவி ஆர்ஷியைப் பற்றி இந்த அகண்ட பாரதத்தின் விக்கியிலேயே ஒரு வரிதான் உள்ளது. ஆனால் புனைவின் வழி சகுனி-ஆர்ஷியின் உறவை நாம் சென்றவடைதும், தன் மகன்கள் கணிகர் சூது கண்களில் பட்டுவிடக்கூடாது என்று கவனம் எடுத்துக்கொள்வதும்.. எல்லாவற்றுக்கும் மேலாக, தன் சகோதரி காந்தாரியிடம் இறுதி விடைபெறும்போது மனம் கனத்துவிட்டது.

“அக்கையிடம் சொல்லுங்கள் அரக்கரே, அவர் ஆடையின் ஒரு முடிச்சு முள்ளில் சிக்கிக்கொண்டதுபோல் இந்நாள் வரை என்னுடனான உறவு இருந்தது என்று. அவருடைய நல்லியல்பால், இந்த எளியோன் மேல் கொண்ட கருணையால் அவர் அந்த ஆடையை கிழித்தெடுக்கவில்லை. அதிலிருந்து அவர் இன்று விடுபட்டார். இன்றுவரை அவரிடம் சொல்லுரைத்தபடி நான் அவருக்கு பாரதவர்ஷத்தை ஈட்டி அளிக்கவில்லை. இனி வாய்ப்பில்லை. அதற்கான தேவையும் இல்லை. ஏனெனில் அவர் ஏற்கெனவே பாரதவர்ஷத்தின் பேரன்னை. அவர் பாரதவர்ஷத்தின் பேரரசி… மும்முடி சூடி அமர்ந்திருப்பவர்.”

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 6

கெடுதவத்தோன் வீழ்ச்சி

Duryodhana (c) respective artist
Duryodhana (c) respective artist

தன் தவத்துக்கு ஈடாக தன் உயிரையே இழக்கிறான். ஒளிந்து கொண்ட துரியோதனனைப் பற்றிய அத்தியாயங்கள் அழகானவை. துரியோதனன் இவ்வுலகை விட்டு விடைபெறும் இடம் அதனினும் அழகானது.

“இது பழி… இது குடியைத் தொடரும் பழி… ஐயமே இல்லை. ஆனால் அப்பழி என்னை சார்க! நான் கெடுநரகு செல்கிறேன். இருளுலகங்களில் அலைகிறேன். என் குடிமேல் நான் இப்பழியை ஈட்டிவைத்துவிட்டுச் செல்லமாட்டேன்” என்றார் யுதிஷ்டிரன். “அரசே, அரசன் நல்லாட்சியை தன் குடிக்கு அளிப்பான் என்றால் அவன் செய்த களப்பழிகள் கரைந்து மறையும்” என்று இளைய யாதவர் சொன்னார். “நான் நல்லாட்சியை அளிப்பேன். அறம்நின்று கோலேந்துவேன்” என்றார் யுதிஷ்டிரன். “இது மூதாதையர் மேல் ஆணை. ஒருகணமும் என் தன்னலத்தை கருதமாட்டேன். என் பெருமை என் புகழுக்கென எதையும் இயற்றமாட்டேன். குடிநலமே கொள்வேன்.” பீமன் “அவ்வண்ணம்தான் துரியோதனன் ஆட்சி செய்தான்” என்றான். யுதிஷ்டிரன் திடுக்கிட்டு அவனை நோக்கியபின் தலைகுனிந்தார்.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 39

இறுதிப் போர் தொடங்கும் முன்னர் இளைய யாதவர் மற்றும் சகதேவனுடைய உடையாடல்கள் வாசிப்பவனுக்கு நெகிழ்ச்சியைத் தரவல்லவை.

அறத்தின் இரு தீர்ப்புகள்.

Gandhari

போரின் முடிவு குறித்து பானுமதிக்கும் காந்தாரிக்கும் செய்தி அறிவிக்க நகுலன் செல்கிறான். ‘நெறிமீறி உன் மகனைக் கொன்றுவிட்டோம், அன்னையே’ என்று காந்தாரி காலில் விழுகிறான். கலங்கும் காந்தாரியின் சொற்களில் ஒரு எதிர்மறைக் குறிப்பும் இல்லை. நல்லா இரு என்கிறார். சில மணித்துளிகளில் அஸ்வத்தாமன், உபபாண்டவர்களை எச்சமின்றிக் கொன்று குவித்துவிட்டான் என்கிற செய்தி வருகிறது.

பானுமதி “அங்கே பாண்டவ மைந்தர்கள் நோயுற்று படுத்திருந்தனர். அவர்கள் எண்மரையும் கொன்று அனலூட்டிவிட்டார் அஸ்வத்தாமன். பாஞ்சாலர்களாகிய சிகண்டியும் திருஷ்டத்யும்னனும் கொல்லப்பட்டார்கள்” என்றாள். காந்தாரி “தெய்வங்களே, என் குடியின் மைந்தரை முற்றழித்துவிட்டீர்களே! தெய்வங்களே” என்று கூவி அழுதாள். இரு கைகளையும் விரித்து “என் மைந்தர்களே! என் மைந்தர்களே!” என வீறிட்டாள்.

நூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 56

அதே சமயத்தில் அஸ்வத்தாமன் கலியின் ஆலயத்தில் சென்று ‘வஞ்சம் தீர்த்துவிட்டேன் அரசே, மகிழ்வு தானே ‘ என்று துரியோதனனிடம் இறைஞ்சி நிற்கிறான். கூடவே கிருபரும் கிருதவர்மனும். எஞ்சியிருக்கும் கருநாகங்களும் பொந்துக்குள் சென்று மறைகின்றன. பதில் அவனுக்கு வரவில்லை. அவனுக்கும் வாசிப்பவனுக்கும் அழுத்தமாகத் தெரிகிறது.

தன் அறம் பேசுகிறார்கள் அனைவரும். அறத்தின் குரலாகப் பேசுபவர் யார்? காந்தாரியையும், துரியோதனனையும் கைகாட்டிவிட்டு முடிகிறது தீயின் எடை.

மீண்டும் சந்திப்போம். நன்று நிகழ்க. வளர்க பாரதம்.

 

Leave a comment