இரண்டாம் நாளுக்கு நான் உங்களை வரவேற்கிறேன். உள்ளே செல்லலாம் வாருங்கள்.
முந்தைய பாகங்கள்
கண்டியில் தொடங்குகிறேன்.
நாங்கள் கண்டி ஏரிக் கரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கினோம்.
அங்கு எப்பொழுதும் Buffet முறையில் காலை உணவு தரப்படும். ஈஸ்டர் சண்டே குண்டு வெடிப்பு நடந்து சிறு மாதங்களுக்குள் சென்றதால் அங்கு சுற்றுலா துறை மிக சரிந்து இருந்தது. விடுதி உணவகத்தில் ஒன்று அல்லது இரண்டு பணியாளர்கள் மட்டும் இருந்தனர். அங்கு காலையில் எங்களுக்கு பான் கேக் தந்தனர். அதோடு வெட்டிய பழங்களும் கிடைத்தன. என்ன.. புதிதாகத்தான் இல்லை! ☹☹☹.
வாருங்கள் கிளம்பலாம்!
இன்றைக்கு நாம் இதெல்லாம் சுற்றிப் பார்க்க போகிறோம்:
- தலதா மாளிகை எனப்படுகிற புத்தர் மடாலாயத்தைச் சுற்றி பார்க்க போகிறோம்.
- தலதா மாளிகைக்குள் இருக்கும் கத்ரகாமா கோயிலைப் பார்க்க போகிறோம்.
- தலதா மாளிகையை சுற்றி முடித்தவுடன் மலையில் ஏறி நுவரெலியாவுக்குச் சென்று, அங்கு ஓர் படகு பயணம் செல்கிறோம்.
வாருங்கள். நாம் தலதா மாளிகை / Temple of tooth உள்ளே செல்லலாம்.
கண்டி புத்தர் பற்கோயில் – The temple of tooth
ஏரிக் கரையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நடக்கிறோம். என் தம்பி உற்சாகமாய் நடந்து வந்தான். இடது பக்கம் பாருங்கள். நிறைய பூக்கடைகள் இருக்கின்றன. கோயிலுக்குப் போகிறவர்கள் வாங்கிச் செல்கிறார்கள்.
ஆற்றங்கரையில் ஃபிளமிங்கோ போன்ற பறவைகள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. துஷார நுழைவுச் சீட்டு வாங்கி வந்தார். சார்க் நாடுகளுக்கான தள்ளுபடியில் கிடைத்தது. எங்களுடன் இன்னொரு கத்தார் நாட்டு பயணி சேர்ந்து கொண்டார். இந்த யுனெஸ்கோ தளத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்க, ஒரு வழிகாட்டியையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
மடாலயத்திற்கு வெளியே சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. சோதனைச் சாவடியைக் கடந்த என் தம்பி உற்சாகத்துடன், அங்கே நின்றிருந்த இராணுவ வீரரிடம் hi-fi செய்தான்.
இந்த கோவிலில், இலங்கையில் உள்ள மொத்த பௌத்த பிக்குகள் இங்கே பூஜை நடத்துவார்கள். நாம் காலை பூஜைக்குச் செல்லாம். இலங்கையில் பிறந்த கைகுழந்தைகளை பிறந்து ஓர் ஆண்டுக்குள் இங்கு கூட்டிட்டு வருவார்களாம்.
சரி. ‘என்னப்பா பல் கோவிலுனு வெளிய சொல்றாங்க. நீ என்னப்பா தலதா மாலிகைணு சொல்லற’ என்று என்னைக் கேட்கிறீர்களா? ஒன்றும் இல்லை. புனித பல் கோவில் என்பது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு நேரடியாக மொழியாக்கம் செய்வது. ‘தலதா மாளிகாவா’ என்பது சிங்களம்.
இங்கு புத்தரின் பல்லை ஒரு தங்க பெட்டிக்குள் வைத்திருக்கிறார்கள். அதை ஆண்டிற்கு ஒரு முறை தான் திறப்பார்கள். புத்தர் காலமானபிறகு புத்தரின் புனிதப் பல் சின்னம் களிங்கத்தில் இருந்தது. களிங்க அரசர் குகாசிவாவின் விருப்ப்படி, அவரது மகள் இளவரசி ஹேமாமாலியும் அவரது கணவர் தந்தரும் அதை இலங்கைக்குக் கடத்தி வந்தனராம். இது கிமு நான்காம் நூற்றாண்டில் நடந்திருக்கிறது.
அவர்களுக்கு அங்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள். அந்தக் கோவிலுக்கு வெளியே ஒரு தோட்டம் இருக்கிறது. அதை போய் நீங்கள் பாருங்கள்.
கோயில் உள்ளே காலை பூசனைக்கு நிறைய நபர்கள் வந்திருக்கின்றனர். நெரிசலாக இருக்கிறது. தாய்மார்கள் மடியில் இருந்த குழந்தைகள் அழுது கொண்டிருக்கின, தூங்கிக் கொண்டு இருக்கின்றன. தியான அறைக்குச் சென்றோம். சமய ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் அங்கே உள்ளன.
எப்படியோ அந்த கோவிலைப் பாரத்துவிட்டோம். கிளம்பத் தயாரான வேளையில், கத்ரகாமா ஆலயத்திற்கும் செல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். கத்தார் காரரும், யுனெஸ்கோ வழிகாட்டியும் சென்று விட்டனர். துஷார எங்களுக்கு விளக்கினார்.
ஒரு குடிசை போல இருக்கிறது கத்ரகாமா தேவாலயம். புத்தர் உள்ளே சயன கோலத்தில் இருக்கிறார். வெளியே விஷ்ணு பிரம்மா கைகூப்பியபடி நிற்கின்றனர். கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கும்.
இப்பொழுது நம்ப Nuwar Eliya வுக்கு கிளம்புவோம். வாருங்கள்.. கண்டி நகரத்தை விட்டு வெளியேறும் வழியில், தொடர் வண்டி நிலையம், கடைத் தெரு, பல்கலைக் கழகத்தைக் காண்கிறோம்.
நுவரெலியாவிற்கு
மலைப் பயணம் தொடங்குகிறது. ஆஹா.. அங்கு பாருங்கள் எவ்வளவு பச்சை பசேல் என்று புல்வெளிகள். வயல்கள். ஆஹா! ஆங்காங்கே சிறிய ஓடைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கீழே பள்ளத்தாக்கு. மேலே மலை முகடுகள். அவற்றில் மழை மேகங்கள் மிதந்து கொண்டு உள்ளன. இலங்கைக்குப் பறந்து செல்லும்போது அனுமாருக்கு மிகவும் குளிர் எடுத்திருக்கவேண்டும்.
நுவரெலியாவிற்குச் செல்வது ஒரு நீண்ட பயணம். இடையில் ஓரிடத்தில் ரோட்டுக் கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டோம். பழுக்காத சிறிய ஆரஞ்சுகள் நன்றாக இருந்தன. அவ்வப்போது வயிறு பிறட்டியது. வழியில் ஓரிடத்தில் இறங்கி ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். அங்கே ஒரு இலங்கை தமிழ் பாட்டியை பார்த்தோம். என் அம்மாவிடம் ஒரு தேநீர் இலை தந்து ஒரு புகைப்படம் எடுத்து எங்களிடம் காசு கேட்டார். நம்ப சுற்றுலா வழிகாட்டி முடியாது என்று அனுப்பினார். நான் பேசுகிற மொழிதான் அவரும் பேசினார். எங்களுக்கு வருத்தமாகிவிட்டது.
வழியில் ரம்போதா அருவிகளைப் பார்க்க, ஒரு பழங்கால கடையில் இறங்கி, என் தம்பிக்கு ஒரு டுக்-டுக் (ஆட்டோ) பொம்மை வாங்கினோம். அதன் விலை அதிகம். (நம்ப ஒரு காசுக்கு ஆயிரம் ரூபாய்). என்னுடைய தனிப் பயிற்சி ஆசிரியைக்காக ஒரு இலங்கை கொடி வைத்த காந்தம் வாங்கினேன். அதற்க்கு மேல் இருந்து பார்த்தால் ரம்போதா அருவிகள் தெரிந்தன. பச்சைப் பசேல் என்று மலைக் காடுகள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருந்தன. மழை தூறுகிறது! Wow!
மதிய உணவை ரம்போதாவில் ஒரு மகளிர் சுய உதவிக் குழு நடத்திய ஒரு ரோட்டோரக் கடையில் (Hela Boujun) உண்டோம்.
அங்கு நான் ஒரு ஆப்பம் சாப்பிட்டேன் சுவையாக இருந்தது. அம்மாவிற்குப் பிட்டு. கார்த்திக்கு இடியப்பம். அப்பாவிற்கு பலாப்பழ கட்லெட் உடன் வில்வம் பூ பானம்.
பொதுவாக இலங்கை செல்லும் இந்தியர்கள், தங்களுக்கான மதிய உணவைக் கட்டி எடுத்துவந்து விடுவதாக துஷார சொன்னார். அதனால், அவரைப் போன்ற ஓட்டுநர்களின் மதிய உணவு ‘முன்ன-பின்ன’ இருக்கும் என்றார். ஆனால் அம்மாவிற்கு இந்த 8 நாட்களும் நாங்கள் முழு ஓய்வு கொடுத்துவிட்டோம். எனவே நாங்கள் எதையும் கட்டிக்கொள்ளவில்லை. அதோடு உள்ளுர் உணவைச் சாப்பிட விருப்பமாக இருந்தது. எனவே இந்த மதிய உணவு, எங்களுக்கு இனிமையாக இருந்தது – மனதிற்கும் நாவிற்கும்.
வழியில் தம்ரோ டீ தொழிற்சாலைக்கு ஒரு விசிட் அடித்தோம்! அவர்கள் சொல்லும் டெக்னாலஜி எல்லாம் கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை!
ஒரு வழியாக, நுவரெலியா வந்துவிட்டோம். Little England என்று சொல்கிறார்கள். கிரெகரி ஏரிக்குச் செல்கிறோம். ஒரு படகுப் பயணத்திற்குச் செல்லலாம். வாருங்கள். ஊ.. மிகவும் குளுருது. Nuwara Eliya வில் இப்பொழுது 14°C. பனி மூட்டமாக இருக்கிறது. பனி கடந்து செல்லும்பொது, எலும்பு வரை எட்டிப் பார்த்து குளிர்கிறது. ஆஆஆஆ….
ஆனால் சாலையில் கூட்டமே இல்லை. ஏரியில் படகில் செல்ல பயணிகள் யாரும் இல்லை. குதிரைக் காரர் ஒருவர் வந்து எங்களுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோனார் பாவம். அப்போதும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது. சென்ற வருடம் தீவிரவாதிகளால் ஊரடங்கு. இந்த வருடம் கொரானாவால் ஊரடங்கு.
சரி விடுதிக்கு பொய் நான் சாப்பிட்டு தூங்கலாம்! சூடாக சப்பாத்தியும் பருப்புக் கறியும், சோறும் கிடைத்தது. இறைவா நன்றி.
அடுத்த வாரம் சந்திப்போம். டாட்டா